Wednesday, August 11, 2010

திறனாய்வுத் துறையும் "கலாநிதி" க.கைலாசபதி

பி. தயாளன்

  • தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர்
  • ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர்
  • "கலை கலைக்காக" என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர்
  • இலக்கியத்துக்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர்
  • சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்
  • தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்று நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர்
  • ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர்
  • இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவர்
  • யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர்
  • இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்

இத்தனை பெருமைக்கும் உரியவர் "ஈழம் தந்த கொடை" கலாநிதி க.கைலாசபதி.



மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் இளைய தம்பி கனகசபாபதி - தில்லைநாயகி நாகமுத்து தம்பதிக்கு 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி பிறந்தார். தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்ததால், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு இராயல் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.


பல்கலைக்கழகக் கல்வி முடிந்தபின், தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.


பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். "தமிழில் வீரயுகப் பாடல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து "கலாநிதி" (முனைவர்) பட்டம் பெற்றார். கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார். சங்க இலக்கியத்தைக் கிரேக்க, ஐரிஷ் முதலிய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார். வீரயுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
"தமிழில் வீரயுகப் பாடல்கள்" என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது. கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறி மரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல், தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் யாழ் - வளாகத் தலைவராக இருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் செயல்பட்டார்.
அமெரிக்காவிலுள்ள "அயோவோ பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும்" சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார். அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் "புதியதைப் படைக்கும் எழுத்துகளுக்குரியர்" என இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.

  • யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு
  • இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு
  • இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக்கழகம்
  • இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு
  • இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு


முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.
"இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது; இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்; அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்" என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.


"கலை, இலக்கியம் முதலியற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; சமூகவியலை பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும்; ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்" என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். "உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்" என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.


"உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன; இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை" என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

  • பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
  • தமிழ் நாவல் இலக்கியம்
  • ஒப்பியல் இலக்கியம்
  • அடியும் முடியும்
  • இலக்கியமும் திறனாய்வும்
  • கவிதை நயம்
  • சமூகவியலும் இலக்கியமும்
  • நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்
  • திறனாய்வுப் பிரச்சினைகள்
  • பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்
  • இலக்கியச் சிந்தனைகள்
  • பாரதி ஆய்வுகள்
  • ஈழத்து இலக்கிய முன்னோடிகள்
  • இரு மகாகவிகள்
  • சர்வதேச அரசியல் நிகழ்வுகள்
  • முதலிய நூல்களைத் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.
  • இலங்கையில் இருந்து வெளிவந்த,
  • தொழிலாளி
  • தேசாபிமானி
  • செம்பதாகை
  • ரெட்பானர்

முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் வடித்துள்ளார்.

பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் "இளங்கதிர்" இதழிலும், இலக்கிய இதழான "மல்லிகை"யிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.
தமிழ்நாட்டு இதழ்களான,

  • தாமரை
  • சாந்தி
  • சரஸ்வதி
  • செம்மலர்
  • தீக்கதிர்
  • ஜனசக்தி
  • ஆராய்ச்சி

முதலியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.


இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான, தத்துவார்த்த நூல், கைலாசபதியின் "தமிழ் நாவல் இலக்கியம்". தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகிறது.

  • கல்வித்துறை நிபுணர்
  • இதழாளர்
  • எழுத்தாளர்
  • ஆய்வாளர்
  • கட்டுரையாளர்
  • விமர்சகர்
  • பேச்சாளர்

எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கினார் கைலாசபதி.


முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி கைலாசபதி 49 வயதில் 1982ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இயற்கை எய்தினார்.
தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழ நாட்டிலிருந்து எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு.

தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலாநிதி கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றென்றும் விளங்குவார்!

Wednesday, August 4, 2010

பொற்காலமும்-புதுயுகமும்!:பேராசிரியர் க. கைலாசபதி

Kailasapathy 3(பொற்காலத்தைப் பற்றிய உணர்வும் எண்ணமும் முற்றிலும் மூடநம்பிக்கையென்று கருதுதல் தவறு. அதனை யார், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டியது. இன்றைய ஆளும் வர்க்கத்தினர், மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற்காலமாகக் காட்டுவர். ஆனால் மக்களோ அடிமனத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடி வாழையாகப் பேணி வைத்துள்ளனர். ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்கள் இதய வேட்கை. அந்த வகையில் பொற்காலம் புனிதமான இலட்சியங்களைப் பாதுகாத்து வருகிறது என்றுங் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை உடையதாயிருப்பினும் மறைந்து போன வர்க்க பேதமற்ற சமூகத்தை நினைவு கூர்வதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டு.)

சென்னை உயர்நீதிமன்றத்து நீதிபதிகளில் ஒருவராக இருந்த டி.எல். வெங்கட்ராம ஐயர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ‘வட துருவத்திலுள்ள பெரும் பனி மலைகளுக்குத் தீ வைத்துவிடலாம். தமிழிலே புதுமைப் புரட்சியேற்படுவது அதைவிடக் கடினம்’ என்று கூறினாராம். வாய்மொழியாக வழங்கும் இக்கூற்றின் உண்மை பொய் எவ்வாறாக இருப்பினும் அடிப்படையான ஒரு நம்பிக்கை வரட்சியை இக்கூற்று எடுத்து விளக்குவதாக உள்ளது. பழமைப் பற்றும் தன்னிறைவு உணர்வும் தமிழ்ச் சமுதாயத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன என்பதே பொதுவாகக் காணப்படும் கருத்து. மாற்றமடையாத, தேங்கி நிற்கும் சமுதாயங்களில் ( (Stagnant Society)) இத்தகைய பழைமையாதிக்கம் காணப்படுவது உலகெங்கும் பொதுவான நியதி. உண்மையான பொருளாதார மாற்றத்தை ஆதாரமாகக் கொண்ட சமுதாயப் புனரமைப்பினைத் தொடர்ந்தே புதுமை பூத்துக் குலுங்கும். அதுவும் ஒரு வரலாற்று நியதிதான்.

இவ்விடத்திலே எமது சமுதாயத்திற் காணப்படும் பழைமைப் பிடிப்பின் ஓர் அமிசத்தைச் சிறிது ஆராயலாம். பழைமையாதிக்கத்தைக் கருத்தளவில் ஆராய்ந்து பார்க்கின், அதன் ஊற்றை இனங்கண்டு கொள்ள முடியும். எமது வரலாற்றின் தொடக்கத்திலே மகோன்னதமான பொற்காலம் ஒன்று நிலவியது என்றும், அதன் பின் வரவர இழி நிலை வளர்ந்து வந்துள்ளது என்றும் ஐதீகம் ஒன்று கருத்துலகிலே ஆழப்பதிந்துள்ளது. உதாரணமாக, தமிழ் நூல் வரலாறு என்ற நூலிலே திருவாளர் பாலூர் கண்ணப்ப முதலியார் பின்வருமாறு எழுதுகிறார்: “பழங்காலம் பொற்காலம் ஆகும். அக்காலத்து மக்கள் நனிநாகரிகராய் வாழ்ந்தனர். தங்கள் வாழ்வை இயற்கையோடு இணைத்து வாழ்ந்தனர். இலக்கிய வளத்தில் சிறந்து விளங்கினர்”;. எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் இலட்சியவாதிகள் சிலர் குறைபாடெதுவுமற்ற கற்பனையுலகம் ஒன்றைப் பற்றுக்கோலாகக் கொள்வது போலச் சென்ற காலத்தின் ஒரு பகுதியை நிறைவான சமுதாயம் இயங்கிய பொற்றகாலமாகச் சிலர் கொள்வர்.

இம் மனப்பதிவு அறிவின் துணையாற் பெறப்படுவதன்று. அரைகுறைச் செய்திகளின் அடிப்படையிலும், ஒரு வகையான மயக்க உணர்வின் அடிப்படையிலுமே பெறப்படுவது. ஆயினும் இதற்கும் கோட்பாட்டு அடிப்படை ஒன்றுள்ளது. அதனைச் சுருக்கமாக விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெரும்பாலான தமிழரைப் பொறுத்தளவில், ஈடிணையற்ற ஏகாதிபத்தியப் பெருமையுடன் ‘அவனி முழுதான்ட’ சோழப் பெருமன்னர் மதிப்புக்குரியவராயிருப்பினும், ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த’ முடியுடை mannarமூவேந்தர் அரசோச்சிய காலப் பகுதியே பொற்காலமாகக் கொள்ளப்படுகிறது. பழமைக்கும் பழமையானதே பாராட்டுக்குரியது போலும். அது மட்டுமன்று, பிற்காலத்திலே தென்னகத்தில் எழுந்த, சேர, பாண்டிய அரசுகளோடும், சோழப் பேரரசோடும் ஒப்பிடும்போது ‘சங்க கால’ முடியுடை மூவேந்தர் குறுநில மன்னராகவே காட்சி யளிக்கின்றனர். கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திலிருந்த செம்பியரான இடைக்காலச் சோழப் பெருமன்னரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் புறநானூற்றுப் பாடல்கள் புகழும் சோழமன்னர்கள் சிறுநிலக் கிழாராகவே தோன்றுவர்.

அதைப் போலவே திரிபுவனச் சக்கரவர்த்திகள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட இரண்டாம் பாண்டியப் பேரரசின் பெருமன்னரோடு ஒப்பிடுமிடத்து, சங்ககாலப் பாண்டிய மன்னர் மன்னராகவே தோன்றுகிறார்கள் அல்லர். அவ்வாறிருந்தும், இடைக்காலத்தில் புகழொடு விளங்கிய பாண்டிய, சோழப் பெருமன்னர்கள் வீரயுகத்தில் வாழ்ந்த தத்தம் மூதாதையரது ‘உலகளந்த சிறப்புக்குத்’ தாம் அருகதையற்றவர் என்றே கருதினர். அந்தளவுக்கு வீரயுகம் ஈடிணையற்றதொன்றாகப் பிற்காலத்தவர் கருத்தில் வேரூன்றியிருந்தது. இக் காலத்திலும் தமிழபிமானத்தோடு பெயர் மாற்றிச் சூட்டிக் கொள்பவர்கள் வீரயுக மன்னர் பெயர்களையும் அவை போன்றவற்றையுமே விரும்புவது கண்கூடு. சுருங்கக் கூறின், ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களாக வீரயுகம் “சான்றோர் வாழ்ந்த காலம்” கழிந்த பொற்காலமாகக் கருதப்பட்டு வருகிறது.

இப்பழமைப் பற்று நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவாக உள்ளது. நியாயமான புராதனப் பெருமை, நியாயம் அற்ற அகங்காரம், அர்த்தமற்ற தூய்மை வாதம் முதலியவற்றிற்கும் ஆதாரமாக அமைந்து விடுகிறது. இதற்கு காரணம் பொற்காலத்தைப் பற்றிய பெருமித உணர்வேயாகும்.

கிரேக்க இலக்கியங்களிலும் இத்தகைய ஒரு நம்பிக்கையைக் காணலாம். தமது ‘இன’ வரலாற்றுத் தொடக்கத்தில் இயற்கையின் மத்தியில் மக்கள் இன்பமாக வாழ்ந்த பொற்காலம் ((Golden Age) ) ஒன்று இருந்தது எனக் கிரேக்க ஆதிக்கவிகளே நம்பினர்.

aandan adimyஇறுதியாக ஒன்று கூறலாம். பொற்காலத்தைப் பற்றிய உணர்வும் எண்ணமும் முற்றிலும் மூடநம்பிக்கையென்று கருதுதல் தவறு. அதனை யார், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டியது. அரசியல் அதிகாரத்தை நாடும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் மொழி, இனம் ஆகியவற்றின் பழைய பொற்காலத்தை மக்களுக்குக் காட்டித் தம் கருமம் பார்க்கின்றனர். இலக்கிய சனாதனிகள் பொற்காலத்தைப் பிரமாணமாகக் கொண்டு ‘தொல்லாசிரியர் நல்லாணை’ என்ற பெயரில் தமது வலுவிழந்த கோட்பாடுகளை நிலைநாட்ட முயல்கின்றனர். இனவாதிகள், பொற்காலத்தைத் தமது சிறையில் அடைத்துக் காட்சிக்காக வைத்துப் பிழைக்கின்றனர்.

Karl_Marxஇவையெல்லாம் பொற்காலத்தைப் பயன்படுத்துவோர் பற்றியன. ஆனால் மக்களும் பொற்காலத்தைத் தமக்குப் பற்றுக்கோடாகக் கொள்வதுண்டு. முடியுடை மூவேந்தர் ஆட்சியும் உறந்தை போன்ற இடங்களிலிருந்த அறங்கூறவையங்களும் அக்கால மன்னர்கள் மக்கள் மீது திணித்த வர்க்க ஆட்சியையே காட்டுகின்றன. இரத்த உறவினராய் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த நேசபாசத்துடன் இயற்கையின் மத்தியில் வாழ்ந்த குலமரபுக் குழுக்களின் அழிவின் மீதே அரசுகள் ‘வர்க்க ஆட்சி’ ஏற்பட்டது. அந்த வர்க்கத்தின் வழிவழி வரும் இன்றைய ஆளும் வர்க்கத்தினர், மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற்காலமாகக் காட்டுவர். ஆனால் மக்களோ அடிமனத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடி வாழையாகப் பேணி வைத்துள்ளனர்.

ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்கள் இதய வேட்கை. ஆகவே அந்த வகையில் பொற்காலம் புனிதமான இலட்சியங்களைப் பாதுகாத்து வருகிறது என்றுங் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை யுடையதாயிருப்பினும் மறைந்து போன வர்க்க பேதமற்ற சமூகத்தை நினைவு கூர்வதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டு